வீட்டு தோட்டம் அமைத்த பெண்களுக்கு பரிசு
- வீட்டு தோட்டம் அமைத்த பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- தாதம்பட்டி நீரேத்தான் கிராம சாவடி முன்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ''எனது குப்பை எனது பொறுப்பு'' நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் மக்கும், மக்காத குப்பைகள் பிரித்து வழங்க கோரியும், பிளாஸ்டிக் ஒழிப்பு, மஞ்சள்பை பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு பிரசாரமும் நடந்தது. தாதம்பட்டி நீரேத்தான் கிராம சாவடி முன்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சண்முகம் வரவேற்றார். பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். திடக் கழிவு மேலாண்மை திட்ட பயிற்சியாளர் சிலம்பரசன் பேசினார். மக்கும், மக்காத குப்பைகள் பற்றிய கண்காட்சி வைக்கப்பட்டு இருந்தது.
மக்கும் குப்பையை உரமாக பயன்படுத்தி வீட்டு தோட்டம் அமைத்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கவுன்சிலர் ஜெயகாந்தன், அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி மாணவர்கள், உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன், பேரூராட்சி பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் ஒருங்கிணைந்த சிறப்பு துப்புரவு பணி முகாம் மூலம் செடி, கொடிகள் அகற்றி வடிகால் சுத்தம் செய்யப் பட்டது. சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் தீலிபன் சக்ரவர்த்தி நன்றி கூறினார்.