குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய டிரைவர் கைது
- குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
- கரிமேடு போலீசார் பாட்டி- பேரன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
மதுரை
மதுரை கரிமேடு, கருப்பையா தோப்பை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (60). இவர் நேற்று மதியம் பேரன் ஆகாசுடன்(13) மேல அண்ணா தோப்பு, டீச்சர்ஸ் காலனி அருகே நடந்து சென்றார். அங்கு வேகமாக வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்புலட்சுமி, ஆகாஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.
வேகமாக சென்ற கார் மேலும் 2 பேர் மீது மோதியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து கரிமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். அப்போது படுகாயம் அடைந்தவர்களில் மதுரை கீழ அண்ணா தோப்பு கருப்பையா மகன் பிரபாகரன் (13) என்பவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
படுகாயம் அடைந்த இன்னொரு சிறுவன் முத்து (14) என்பது தெரியவந்தது. இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கரிமேடு போலீசார் பாட்டி- பேரன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகன் (43) குடிபோதையில் வாகனம் ஓட்டியது தெரிய வந்தது. அவரை கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.