உள்ளூர் செய்திகள்

தடை விதிக்கப்பட்டதை அறியாமல் சதுரகிரி வந்த பக்தர்கள் அடிவாரத்தில் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.

சதுரகிரிக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம்

Published On 2022-08-09 09:40 GMT   |   Update On 2022-08-09 09:40 GMT
  • சதுரகிரிக்கு வந்த பக்தர்கள் அடிவாரத்தில் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.
  • கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருமங்கலம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை மேல் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது 6 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்பின் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கபட்டது. ஆனால் கடந்த ஒரு வார காலமாக சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் திடீர் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சதுரகிரிக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள சங்கிலிபாறை, வழுக்குப்பாறை, மாங்கனிஓடை, பிளாவடி கருப்பணசாமி பகுதிகளில் உள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த முறை பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பதாக வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆடிஅமாவாசை அன்று சதுரகிரிக்கு வர இயலாத பக்தர்கள் ஆடி பவுர்ணமி நாளில் வருவது உண்டு. ஆனால் தொடர் மழை காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை அறியாமல் இன்று சதுரகிரி அடிவாரத்துக்கு வந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News