எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடத்துவதா?- ஆர்.பி.உதயகுமார் கண்டனம்
- எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடத்துவதா? என்று ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்தார்.
- 2 கோடி தொண்டர்கள் நேசிக்கும் எடப்பாடியாரை பழி சுமத்துவது அது உங்களுக்கே திரும்பிவிடும்.
மதுரை
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்கின்ற தி.மு.க. அரசை எதிர்த்து அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடியார் தினந்தோறும், அறிக்கை வாயிலாகவும், சட்டமன்றத்திலும் உரிமை குரலை எழுப்பி வருகிறார்.
ஆனால் தி.மு.க.வை இன்றைக்கு சிலர் துதி பாடுகிற ஒரு நிலையை பார்க்கிறபோது நமக்கு வேதனையாக இருக்கிறது. புரட்சித்தலைவி அம்மாவின் திருநாமத்தை சொல்லி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சொல்லி வளர்ந்தவர்கள், அம்மாவின் அடையாளம் என்று வாழ்ந்தவர்கள், இன்றைக்கு அம்மாவின் மரணத்திற்கு காரணமாக அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தொடுக்கப்பட்ட பொய் வழக்குகளை, கொடுக்கப்பட்டிருக்கிற அந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு துதி பாடும் நிலையில் உள்ளனர் இதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களும், தமிழக மக்களும் இன்றைக்கு எள்ளி நகையாடுகிறார்கள்.
இன்றைக்கு மக்களால் கைவிடப்பட்டவர்கள், தொண்டர்களால் கைவிடப்பட்டவர்கள், கழக நிர்வாகிகளின் நம்பிக்கை இழந்தவர்கள், இந்த இயக்கத்திற்கு தொடர்ந்து இடையூறாக இருப்பவர்கள் ஏன் இன்னும் ஒரு படி மேலே, புரட்சித் தலைவர் மாளிகையை தன் காலால் எட்டி உதைத்த கயவர்கள், அம்மாவே தெய்வம் கழகமே கோயில் என்று வாழ்ந்து வருகிற தொண்டர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு குண்டர்களும் இருந்து நமக்கு வேதனை அளிக்கிறது.
அரசியலிலே நிலை நிறுத்திக் கொள்வதற்காக எதிரிகளிடம் உண்மை தொண்டர்களை, விசுவாசத்தொண்டர்களை அடமானம் வைத்து, தங்கள் வாழ்வை உயர்த்தி கொள்வதற்காக எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து, இன்றைக்கு கடைசி முயற்சியாக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் என்று சொல்லுகிறார்கள்.
எதற்காக இந்த போராட்டத்தை இன்றைக்கு நீங்கள் நடத்துகிறீர்கள் உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? இந்த சம்பவத்தில் வழக்குகளை பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, அதனு டைய குற்றவாளிகளை நீதிமன்றத்திலே அங்கே சமர்ப்பித்து அந்த சட்ட நடவடிக்கை எல்லாம் உங்களுக்கு தெரியாதா? அப்போதெல்லாம் நீங்கள் எங்கே அமெரிக்கா ஐக்கிய நாட்டுல இருந்தீர்களா? ஜப்பானில் இருந்தீர்களா? இன்றைக்கு போராட் டத்திற்கு தலைமை தாங்குகிற நீங்கள் (ஓ.பன்னீர் செல்வம்) தானே அன்றைக்கு இருந்த இத்தனை நடவடிக்கை களுக்கும் முக்கிய பொறுப் பாளராக இருந்து அன்றைக்கு நீங்கள் இதை வழிநடத்துவதையும் நீங்கள் வரலாற்றை மறைத்து விட முடியாது.
எடப்பாடியாருக்கு எதிராக போராட தொண்டர்களை நீங்கள் பங்கேற்க செய்வதற்கு எடுக்கிற முயற்சி எல்லாம் தோல்வில்தான் முடியும்.
8 கோடி தமிழர்களின் நம்பிக்கையை பெற்று இருக்கின்ற எடப்பாடியாரை நீங்கள் அவதூறு செய்யலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகும்.
தி.மு.க.வின் ஊது குழலாக மாறி நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 2 கோடி தொண்டர்கள் நேசிக்கும் எடப்பாடியாரை பழி சுமத்துவது அது உங்களுக்கே திரும்பிவிடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.