உள்ளூர் செய்திகள்

பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு காத்திருந்த விவசாயிகள்.

குறுவை தொகுப்பு திட்ட பயன்கள் முழுமையாக கிடைக்கவில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு

Published On 2022-07-26 10:22 GMT   |   Update On 2022-07-26 10:22 GMT
  • ஒருவருக்கு அரை ஏக்கருக்கு மட்டுமே வழங்க இயலும் என்று கூறியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • சில கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் குறுவை நடவு செய்த பின்னரே சான்று தருவதாக கூறியதால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பூதலூர்:

தஞ்சை மாவட்டம், பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் நேற்று குறுவை தொகுப்பு திட்டத்தில் உரங்கள் பெறுவதற்கு ஆணை வாங்க காத்திருந்தனர். அரசு அறிவிப்பின்படி குறுவை தொகுப்பு திட்டம் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் பரப்பிற்கு வழங்கப்பட வேண்டும். இதற்காக விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்களிடம் சான்றுகள் பெற்று வந்திருந்தனர்.

நேற்று திடீரென விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு குறுவை தொகுப்பு திட்டம் வழங்க இயலாது, ஒருவருக்கு அரை ஏக்கருக்கு மட்டுமே வழங்க இயலும் என்று கூறியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.பூதலூர் வட்டாரத்தில் வலிமையான விவசாயிகள் துணிவான கிராம நிர்வாக அலுவலர்கள மூலம் முன் கூட்டியே சான்றிதழ்களை பெற்று குறுவை தொகுப்பு திட்ட உரங்களை பெற்றுள்ளனர்.

சில கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் குறுவை நடவு செய்த பின்னரே சான்று தருவதாக கூறியதால் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. பூதலூரில் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் பயன் பெறும் வகையில் வேளாண்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து விவசாயிகளுக்கு அரசு அறிவித்த திட்ட பயன்கள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுகின்றனர்.

Tags:    

Similar News