உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்- கலெக்டர் வேண்டுகோள்

Published On 2022-08-13 10:00 GMT   |   Update On 2022-08-13 10:00 GMT
  • அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  • தேசிய கொடியை ஏற்றுவதில் ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் தண்டனை எடுக்கப்படும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலக வளாகங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தேசிய கொடியை ஏற்றி வைப்பது மரபாகும்.

எதிர்வரும் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு, அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கிராம ஊராட்சிகளில் சாதியப் பாகுபாடுகள் காரணமாக தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சனைகளிலும், தேசியக் கொடியையும், அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயலிலும் ஈடுபடக் கூடாது.

அதுபோல, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும், எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றோர் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேசிய கொடியை ஏற்றுவதில் ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் தண்டனை எடுக்கப்படும்.

இது குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை உதவி எண் 1077 அல்லது உதவி இயக்குநர் கைப்பேசி எண் 7402607002 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News