உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி பகுதியில்வீடுகளில் கொள்ளையடித்தபலே திருடன் கைது

Published On 2023-03-19 09:40 GMT   |   Update On 2023-03-19 09:41 GMT
  • கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றிருப்பது தெரிந்தது.
  • மொத்தம் ரூ.32 லட்சம் மதிப்பிலான 80 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து, சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி பாலாஜி நகரை சேர்ந்தவர் மோகன். இவரது வீட்டின் பூட்டை கடந்த 15-ம் தேதி மர்ம நபர்கள் உடைத்து வீட்டினுள் இருந்த 50 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்து சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில், டிஎஸ்பி தமிழரசி மேற்பார்வையில் டவுன் இன்ஸ்பெக்டர் கபிலன், எஸ்ஐ பிரபாகரன், எஸ்எஸ்ஐ ராஜா, ஏட்டு சாரதி, போலீஸ் ஏழுமலை ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில், இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டது கிருஷ்ணகிரி அடுத்த தண்டேகுப்பத்தை சேர்ந்த பழைய குற்றவாளியான சதீஷ்குமார் (25) என்பது தெரிந்தது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றிருப்பது தெரிந்தது.

உடனடியாக தனிப்படை போலீசார் கோவாவிற்கு விரைந்து சென்று, அங்கு பதுங்கியிருந்த சதீஷ்குமாரை, கைது செய்து விசாரணைக்காக கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில் அவர், ஏற்கனவே கிருஷ்ணகிரி அருகே பெரியமோட்டூரில் சிவக்குமார் என்பவரின் வீட்டில் 17.5 பவுன் தங்க நகைகளும், பழையபேட்டை செல்வராஜ் நகரில் உள்ள அம்மு என்பவரது வீட்டில் 5 பவுன் தங்க நகைகளும், காவேரிப்பட்டணம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள தனலட்சுமி என்பவரின் வீட்டில் 7 பவுன் தங்க நகைகளும் என 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார்.

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், தனது நண்பர்களான திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள வைப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விக்கி(எ)விக்ரம், அப்பு(எ)விமல் ஆகியோரிடம் வைத்திருந்தது தெரிய வந்தது. அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.32 லட்சம் மதிப்பிலான 80 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து, சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், சதீஷ்குமார் மீது ஏற்கனவே கிருஷ்ணகிரி நகரம், தாலுகா, வேப்பனஹள்ளி, காவேரிப்பட்டணம், மகாராஜகடை உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொள்ளை சம்பவங்கள் தனித்தே ஈடுபடுவது வழக்கம் கொண்ட சதீஷ், அந்த நகைகளை விற்க வைப்பூரில் உள்ள தனது நண்பர்களுக்கு செலவு செய்வது, சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டவர் என தனிப்படை போலீசார் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News