உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில், கன்னியாகுமரி ரெயில் நிலையங்களில் மீண்டும் பேட்டரி கார்கள் இயக்கம் - பிரின்ஸ் எம்.எல்.ஏ. தகவல்

Published On 2023-07-15 07:44 GMT   |   Update On 2023-07-15 07:44 GMT
  • சிறிய வகை கார்கள் பயணிகள் நடை மேடை 1-லிருந்து 2 மற்றும் 3-க்கு கட்டணம் வந்தது
  • கட்டணம் ஒரு பயணிக்கு 10 ரூபாய் என்று நிர்ணயம் செய்ய வேண்டும்

கன்னியாகுமரி :

குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ரெயில் நிலையம் மாவட்ட மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் நிலையம் ஆகும். இந்த ரெயில் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டரியால் இயங்கும் சிறிய வகை கார்கள் பயணிகள் நடை மேடை 1-லிருந்து 2 மற்றும் 3-க்கு கட்டணம் வந்தது. இந்த வசதி ஊனமுற்றோர், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோய்வாய் பட்டவர் என அனைத்து தரப்பினருக்கும் மிகவும் உதவியாக இருந்து வந்தது. இது மட்டுமில்லாமல் குடும்பத்துடன் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் தங்கள் லக்கேஜ்களை எடுத்து செல்ல மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

பின்னர் ரெயில்வே துறை இந்த சேவையை கொரோனா காலகட்டத்தில் திடீரென நிறுத்தி விட்டது. இதனால் அனைத்து தரப்பினரும் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே பேட்டரி கார் வசதியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று மாவட்ட மக்கள் சார்பில் நான் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மற்றும் கோட்ட மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்து வந்தேன்.

இந்த கோரிக்கையின் பயனாக நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதிக்காக ஒப்பந்தபுள்ளி கோரும் பணிகள் நடந்து வருவதா கவும் வெகு விரைவில் இந்த வசதி நாகர்கோவில் சந்திப்பு மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் வரும் என்றும் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கடிதத்தில் தெரி வித்துள்ளார். இந்த வசதி வந்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு இந்த வசதி வரும் போது அதன் கட்டணம் ஒரு பயணிக்கு 10 ரூபாய் என்று நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News