நாகர்.கலெக்டர் அலுவலகத்தில் இன்று நகை மதிப்பீட்டாளர்கள் திடீர் போராட்டம் - அதிகாரிகள் சமரச பேச்சு
- இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நகை மதிப்பீட்டாளர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- நகை மதிப்பீட்டாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்க நகை மதிப்பீட்டாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். தீபாவளி முன்பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி நகை மதிப்பீட்டாளர்கள் ஏற்கனவே கூட்டுறவு சங்க இணை பதிவாளரிடம் மனு அளித்திருந்தனர்.
இது தொடர்பாக நகை மதிப்பீட்டாளர்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலையில் ஆதிதிராவிட முன்னேற்ற இயக்கத்தின் தலைவர் ஜான் விக்டர் தாஸ் தலைமையில் நிர்வாகிகள், நகை மதிப்பீட்டாளர்கள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் உள்ள கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அவர்கள் அதிகாரியை சந்தித்து இது தொடர்பாக பேசினர். அப்போது அதிகாரிகள் சரிவர பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நகை மதிப்பீட்டாளர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து இப்பிரச்சினை தொடர்பாக வருகிற 23-ந்தேதி பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதனை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்று கொண்டனர். இதையடுத்து நகை மதிப்பீட்டாளர்கள் மற்றும் ஆதி திராவிட நிர்வாகிகள், அமைப்பினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். நகை மதிப்பீட்டாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.