உள்ளூர் செய்திகள்

நித்திரவிளை அருகே திருட்டு நடந்த குருசடியில் உண்டியலை உடைத்த மர்மநபர்கள்

Published On 2023-07-22 13:16 IST   |   Update On 2023-07-22 13:16:00 IST
  • ஆராதனைக்காக பெண்கள் வந்தபோது மாதா சொரூபத்தின் மீது சுற்றப்பட்டிருந்த ஆடைகள் அவிழ்ந்து கிடந்துள்ளது
  • குருசடிக்குள் புகுந்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என்ற கோணத்தில் விசாரணை

நாகர்கோவில் :

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சரல்முக்கு பகுதியில் கோயிக்கல் தோப்பு புனித தோமையார் ஆலயம் உள்ளது. தற்போது இந்த ஆலயத்தில் புனரமைப்பு பணி நடந்து வருவதால் ஆலயத்தின் முன் உள்ள மாதா குருசடியில் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த ஜூலை மாதம் திருவிழா நடைபெற்றது. அப்போது மாதா சொரூபத்தில் தங்க நகைகளை அணிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை ஆராதனைக்காக பெண்கள் வந்தபோது மாதா சொரூபத்தின் மீது சுற்றப்பட்டிருந்த ஆடைகள் அவிழ்ந்து கிடந்துள்ளது.இதனை கண்டு சந்தேக மடைந்த பெண்கள் ஆலய பங்கு தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு வந்து பார்த்தபோது குருசடியின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப் பட்டு சொரூபத்தில் அணி விக்கப்பட்டிருந்த தங்க நகைகளில் ஒரு சவரன் தங்க சங்கிலி மற்றும் மூன்று மோதிரங்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

அதே நேரத்தில் மாதாவின் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த தங்க பொட்டு மற்றும் தாலி சுட்டிகளை திருடர்கள் எடுத்து செல்லாமலும், குருசடியின் கீழ் உள்ள காணிக்கை பெட்டியை எடுக்காமலும் சென்றிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பங்கு தந்தை நித்திரவிளை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் நித்திரவிளை போலீசார் சம்பவ இடம் வந்து குருசடிக்குள் புகுந்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு அங்குள்ள காணிக்கை பெட்டி பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

யாரோ மர்மநபர்கள் உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தை திருட முயற்சித்துள்ளனர். இது குறித்தும் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News