உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் இன்று இரவு வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பவனி

Published On 2022-09-30 07:48 GMT   |   Update On 2022-09-30 07:48 GMT
  • நவராத்திரி 5-ம் திருவிழாவையொட்டி நடந்தது
  • இலங்கை பக்தர் கூடை கூடையாக மலர் தூவி வழிபாடு

கன்னியாகுமரி:

உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

இந்தக் கோவிலில் நவ ராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கடந்த 26-ந்தேதிதொடங்கியது. 4-ம்திருவிழாவான நேற்று இரவு பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனிவந்த நிகழ்ச்சி நடந்தது. கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது பக்தர்களின் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தைமூங்கில் தண்டையத்தில் அமரவைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் 4-ம் திருவிழா மண்டகப்படி கட்டளைதாரர்கள் பலவூர் அண்ணாதுரை முத்துக்குமாரி கொட்டா ரம் இசக்கிமுத்து கன்னியா குமரியைச் சேர்ந்த வருவாய்த்துறை வருவாய் ஆய்வாளர் மகாராஜன், கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்க தலைவர் பால்சாமி, செயலாளர்அரிகிருஷ்ண பெருமாள், பொருளாளர் வைகுண்ட பெருமாள், துணைச் செயலாளர் ஓம் நமச்சிவாயா, கொட்டாரம்பேரூராட்சி வார்டு கவுன்சிலர் வசந்தகுமாரி, சரக்கு மற்றும் சேவை வரி ஆலோசகர் வெங்கடகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

5-ம்திருவிழாவான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11 30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தியும் அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள்மற்றும் சந்தனக்காப்பு அலங்கா ரத்துடன் தீபாராதனையும் அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும் இரவு8 மணிக்கு வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் போது இலங்கையை சேர்ந்த அறங்காவலர் டாக்டர் செந்தில்வேள் கூடை கூடையாக தாமரை மரிக்கொழுந்து, கொழுந்து, பிச்சி, முல்லை, ரோஜா உள்பட பல வண்ண மலர்களை தூவி வழிபடும் நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

Similar News