மணவாளக்குறிச்சி அருகே குருசடியில் சிலை உடைப்பு - மீனவர் கைது
- சுமார் 3½, 2½ மற்றும் ஒரு அடி உயரத்தில் அந்தோணியார் சிலைகள் உள்ளன
- போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்தனர்
மணவாளக்குறிச்சி :
மணவாளக்குறிச்சி அருகே தருவை பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின் (வயது 67). இவர் அதே பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவரது வீட்டருகே குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் அந்தோணியார் குருசடி உள்ளது.
இதில் சுமார் 3½, 2½ மற்றும் ஒரு அடி உயரத்தில் அந்தோணியார் சிலைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு குருசடி பக்கம் ஏதோ சத்தம் கேட்டது. உடனே பெஞ்சமின் அங்கு சென்று பார்த்தபோது, அங்கு பெரியவிளையை சேர்ந்த வின்சென்ட் மகன் ஸ்டாலின் (43) அங்கிருந்த 2½ மற்றும் ஒரு அடி உயர சிலைகளை உடைத்து சேதப்படுத்தி, அங்கு வைத்திருந்த உண்டியலையும் பணத்துடன் எடுத்துச் சென்று விட்டான். இதுகுறித்து பெஞ்சமின் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்தனர். போலீசார் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.