தோவாளை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மலர் முழுக்கு விழா
- வருகிற 12-ந் தேதி நடக்கிறது
- விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் திருமலை முருகன் பக்தர்கள் சங்கம் செய்து வருகிறது.
கன்னியாகுமரி:
தோவாளை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 53-வது மலர்முழுக்கு விழா வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு அன்றைய தினம் காக்கும் விநாயகர் கோவில் கணபதி வேள்வியும் சுப்பிர மணிய சுவாமிக்கு திருநீர் முழுக்கு நடக்கிறது. தொடர்ந்து பின்பு காக்கும் விநாயகர் கோவிலில் இருந்து அலங்கார யானை மீது பால்குடம் மற்றும் பால்குடம் ஏந்தி பக்தர்கள் மேளதாள பரவச பஜனைகளுடன் ஊர்வலம் செல்கிறது.
தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன் முன்னிலையில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்.அதன் பின்பு பகல் பால், பன்னீர், சந்தனம், தேன், இளநீர் முழுக்குகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.
இரவு மலர் முழுக்கு விழா தொடங்கி சிறப்பு தீபாராதனை அதன்பிறகு தோகைமயில் முருகப் பெருமானாக பக்தர்களுக்கு காட்சியளித்து பிரசாதம் வழங்கப்படுகிறது. விழா வின் சிறப்பு நிகழ்ச்சியாக குமரேசர் கலையரங்கத்தில் தோவாளை பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா அரசு வக்கீல் பழனி தொடங்கி வைக்கிறார்.
மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமையில் பஞ்சாயத்து தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலையில் திரைப்படம் மெல்லிசை நடைபெறுகிறது. மலர் முழுக்கு விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் திருமலை முருகன் பக்தர்கள் சங்கம் செய்து வருகிறது.