குலசேகரம் அருகே பள்ளியின் கழிவுநீர் குழாய் சேதம்; எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது
- கடந்த 21-ந் தேதி பள்ளியிலிருந்து செல்லும் கழிவு நீர் குழாயை சீரமைக்கும் பணியில் 2 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்
- கழிவு நீர் குழாயை உடைத்து சேதப்படுத்தியதோடு ராதாகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி :
குலசேகரம் அருகே உள்ள கூடைத்துக்கி படநிலத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 55) இவர் அங்குள்ள தனியார் பள்ளியின் தலைவராக உள்ளார்.
கடந்த 21-ந் தேதி பள்ளியிலிருந்து செல்லும் கழிவு நீர் குழாயை சீரமைக்கும் பணியில் 2 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ராதா கிருஷ்ணன் அந்தப் பணியை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.
அப்போது மணலி விளை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (38)அங்கு வந்து தொழிலாளர்களை வேலை செய்ய விடாமல் தடுத்துள்ளார். பின்னர் நேற்று முன்தினம் கழிவு நீர் குழாயை உடைத்து சேதப்படுத்தியதோடு ராதாகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர். மணிகண்டன் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.