உள்ளூர் செய்திகள்

வெள்ளி கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் பவனி

Published On 2023-10-17 07:40 GMT   |   Update On 2023-10-17 07:40 GMT
  • திரளான பக்தர்கள் பங்கேற்பு
  • கன்னியாகுமரி கோவிலில் நவராத்திரி 2-ம் திருவிழா

கன்னியாகுமரி :

உலகப்புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. 2-ம் நாள் திருவிழா நேற்று வணிக வரித்துறை சார்பில் நடந்தது.

இதையொட்டி நேற்று மாலை சமய உரையும் அதைத் தொடர்ந்து பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது. இரவு நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை முன்செல்ல வெள்ளிக்கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது ஓதுவார்களின் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.

3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. 3-ம்திருவிழாவான இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வருவாய்துறை சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11-30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள்மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனையும் ஆன்மீக அருள் உரையும் நடக்கிறது.

இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 8 மணிக்கு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Tags:    

Similar News