உள்ளூர் செய்திகள்

குமரியில் நான்கு வழி சாலை பணிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு தகுந்த இழப்பீடு

Published On 2023-09-23 08:19 GMT   |   Update On 2023-09-23 08:19 GMT
  • மத்திய மந்திரியிடம் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
  • மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில் :

டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்கரியை விஜய்வசந்த் எம்.பி. சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிக் காக தங்களின் நிலத்தை அரசுக்கு வழங்கிய மக்களுக்கு போதிய இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. குறிப்பாக திருப்பதி சாரம், குன்னத்தூர், பேரூர், கப்பியறை, ஆளூர், தோவா ளை, பெருங்குடி மற்றும் ஆரல்வாய்மொழி ஆகிய ஊர்களுக்குட்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கு வதில் அரசு பாரபட்சம் காட்டியுள்ளது.

நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம் 2013-ன்படி இழப்பீடு தொகையை மாவட்ட கலெக்டர் முன் 2018 பிப்ரவரி மாதம் நடந்த கூட்டத்தின் போது வழங்க ஒத்துக்கொண்டனர். பின்னர் நெடுஞ்சாலைத் துறை உரிய இழப்பீடு தொகை வழங்க மறுத்து விட்டது. இந்த கிராமங்களுக்கு பழைய சட்டத்தின் கீழ் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என்று தெரிவித்தது.

2021-ம் ஆண்டுக்கு பின்னர் இழப்பீடு வழங்கு வதை தேசிய நெடுஞ்சாலைத்துறை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நடவடிக்கையால் 251 நில உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கு ஆணையிட்ட பின்னரும், இந்த தொகையை வழங்கு வதற்கு நெடுஞ்சாலைத்துறை மறுத்து வருகிறது. இது மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே தாங்கள் தயவு கூர்ந்து நெடுஞ்சாலை துறையை அறிவுறுத்தி, நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்று தாமதம் இன்றி உரிய இழப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான்கு வழி சாலை திட்டப்பணியை விரைவாக முடிப்பதற்கு இது மிகவும் முக்கியம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News