உள்ளூர் செய்திகள்

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் மது கடத்தி வந்து விற்ற 2 பேர் கைது

Published On 2023-06-22 07:39 GMT   |   Update On 2023-06-22 07:39 GMT
  • 42 மதுபாட்டில்களுடன் மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல்
  • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கு அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக வெளியூர்களில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் மது கடத்திக் கொண்டு வந்து மது விற்கப்படுவதாக கன்னியாகுமரி போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிள்களில் அனுமதி இல்லாமல் மது விற்றுக் கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் விற்பதற்காக மறைத்து வைத்திருந்த 42 மது பாட்டில்களை போலீசார் கண்டு பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து அந்த 42 மது பாட்டில்களையும் அவர்கள் மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதற்காக பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் ஒருவர் பெயர் சதீஷ்குமார் (வயது 38) என்பதும், நெல்லை மாவட்டம் திருக்கணங்குடியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இன்னொருவர் பெயர் அய்யப்பன் (40) என்பதும், நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News