உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

Published On 2023-10-12 07:08 GMT   |   Update On 2023-10-12 07:08 GMT
  • திரளான பக்தர்கள் பங்கேற்பு
  • கோவிலை சுற்றி 3 முறை மேளதாளங்கள் முழங்க வலம் வந்த நிகழ்ச்சியும் நடந்தது

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது ஆகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டி உள்ளதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இங்கு குகன் என்ற முருக கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வரக்காரணமாயிற்று.

குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5½ அடி உயர சிவலிங்க சிலை இந்த கோவிலில் தான் அமைந்து உள்ளது. அப்படிப்பட்ட புகழ் பெற்ற இந்த குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.

இதையொட்டி காலை யில் கணபதி ஹோமமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் 1008 வலம்புரி சங்குகளை சிவலிங்க வடிவத்திலும் ஓம் வடிவத்திலும் வடிவமைத்து வைத்து அதில் புனித நீர் நிரப்பி சங்கு பூஜை நடத்தப்பட்டது. அதன் பிறகு குகநாதீஸ்வர பெருமானுக்கு 1008 சங்காபிஷேகமும் நடந்தது. அதைத் தொடர்ந்து மதியம் அலங்கார தீபாரதனையும் வாகன பவனியும் நடந்தது.

அதனைத் தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளங்கள் முழங்க வலம் வந்த நிகழ்ச்சியும் நடந்தது. அதன்பிறகு பக்தர்களுக்கு அருட்பி ரசாதம் வழங்குதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News