உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி குமரி கோவில்களில் நாளைமறுநாள் இரவு சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது

Published On 2022-12-04 08:17 GMT   |   Update On 2022-12-04 08:17 GMT
  • சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்
  • இதற்காக உயரமான பனை மரங்கள் வெட்டி எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு உள்ள வீதியில் நடப்படும்

கன்னியாகுமரி:

கார்த்திகை தீபத் திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண் டாடப்படுகிறது. இதை யொட்டி குமரி மாவட் டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசுவாமி கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில் உள்பட பல கோவில்களில் கார்த்திகை தீபத் திரு விழாவையொட்டி நாளை மறுநாள் இரவு 9 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

இதற்காக உயரமான பனை மரங்கள் வெட்டி எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு உள்ள வீதியில் நடப்படும். அந்த பனை மரத்தை சுற்றி பனை ஓலைகளால் வேயப்படும். இரவு கோவில் அர்ச்சகர் பனை மரத்தின் உச்சியில் ஏறி பூஜை செய்து தீபம்ஏற்றி விட்டு கீழே இறங்கி வந்து விடுவார். அதன் பிறகு அந்த பனை மரத்தை சுற்றி வேயப்பட்டிருக்கும் பனைஓலை முழுவதும் தீயில் எரிந்து சாம்பலாகிவிடும்.

அந்த சாம்பலை பக்தர்கள் அள்ளி சென்று தங்களது வீடுகளிலோ தொழில் நிறுவனங்களிலோ அல்லது விளை நிலங்களிலோ போடுவது வழக்கம். இந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

Tags:    

Similar News