உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல் தொங்குபாலத்தை வெள்ளம் சூழ்ந்து சென்ற காட்சியையும், கரையோர பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதையும் படத்தில் காணலாம்.

1 லட்சத்து 80ஆயிரம் கனஅடியான நீர்வரத்து: செந்நிறமாக மாறிய ஒகேனக்கல் காவிரி வெள்ளம்

Published On 2022-08-05 09:53 GMT   |   Update On 2022-08-05 09:53 GMT
  • ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
  • ஒகேனக்கல்லில் இருந்து ஓசூர் செல்லும் சாலையில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

பென்னாகரம்,

கர்நாடகா, கேரளா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

இதனால் கர்நாடக மாநில கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடிநீரும், கபினி அணையில் இருந்து 17 ஆயிரம் கனஅடிநீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் இந்த இரு அணைகளில் இருந்து 97 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கேரட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு மற்றும் காவிரி கரையோர பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

இந்த தண்ணீர் காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலி குண்டுலுவுக்கு கரைபுரண்டு வந்தது.

காவிரி ஆற்றில் இருகரையை யும் தொட்டபடி செந்நிறமாக காட்டாற்று வெள்ளம் வந்தது.

இந்தநிலையில் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

இன்றுகாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்தது.

ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி தெரியாத அளவிற்கு பாறைகள் மூழ்கிய படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 27-வது நாளாக தடை விதித்துள்ளது.

ஒகேனக்கல்லில் காவிரி கரையோர தாழ்வான பகுதிகளாக ஊட்டமலை, நாடார் கொட்டாய், ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் அங்கு வசித்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும் அங்கு வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லில் இருந்து ஓசூர் செல்லும் சாலையில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பென்னாகரம் அருகே உள்ள அத்திமரத்தூர் கிராமத்தை சேர்ந்த குருசாமி, இவரது மனைவி பங்காரு அம்மாள் ஆகியோர் ஒகேனக்கல்லில் முருகன் கோவில் கட்டி அங்கேயே வசித்து வந்தனர்.

இந்தநிலையில் ஒகேனக்கல்லில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் நடுவில் அமைந்துள்ள முருகன் கோவிலில் சிக்கி கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு குழுவினர், வருவாய் துறையினர் வயது முதிர்ந்த தம்பதியை துரிதமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆற்றின் குறுக்கே தற்காலிக நடைமேடை பாலம் அமைத்து தீயணைப்பு படையினர் அந்த தம்பதியை ஸ்ட்ரெச்சர் போன்ற படுக்கையில் படுக்க வைத்து இறுககட்டி பத்திரமாக மீடடனர்.

ஒரு மணி நேரம் போராடி அந்த தம்பதியை மீட்ட தீயணைப்புத் துறையினக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News