உள்ளூர் செய்திகள்

மக்காச்சோளம் பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்தும் முறை

Published On 2023-02-22 09:53 GMT   |   Update On 2023-02-22 09:53 GMT
  • மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலால் 30 முதல் 50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
  • 60-ம் நாள், தேவைப்பட்டால் தாக்குதல் இருக்கும் பட்சத்தில் மேற்காணும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் மீண்டும் தெளிக்கலாம்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலால் 30 முதல் 50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உரிய தருணத்தில் தேவையான பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு விவசாயிகள் பயனடையலாம்.

அமெரிக்கன் படைப்புழு, தாய் அந்துப் பூச்சிகள் உள்ளதா என கண்காணிக்க, விதைத்தவுடன் இனக்கவர்ச்சி பொறிகள் எக்டருக்கு 5 எண்கள் வீதம் வைத்து கண்காணித்து பொருளாதார சேத நிலைக்கு அதிகமாகும் போது கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

பொருளாதார சேத நிலையினை கடந்து அதிகரிக்கும் பட்சத்தில் விதைத்த 15 முதல் 20 நாட்களில், அசாடிராக்டின் 1500 பிபிஎம் 50மி.லி / 10 லிட்டர் நீர், குளோரன்ட்ரனிலிப்ரோல் 18.5 சதவீதம் எஸ்.சி 4 மி.லி / 10 லிட்டர் நீர் (அல்லது) புளுபென்டமைடு 480 எஸ்.சி 4 மி.லி / 10லிட்டர் நீர் வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

மேலும், விதைத்த 40 முதல் 45 நாட்களில் தாக்குதல் தென்பட்டால் இமாமெக்டின் பென்சோயேட் 5 சதவீதம் எஸ்.ஜி – 4 கிராம் / 10 லிட்டர் நீர் அல்லது ஸ்பைன்டோரம் 11.7 சதவீதம் எஸ்.சி 5 மிலி / 10லிட்டர் நீர் அல்லது நாவாலூரான் 10- இ.சி 15 மிலி / 10லிட்டர் நீர் அல்லது மெட்டாரைசியம் அனிசோபிலியே 80 கிராம்/ லிட்டர் நீர் வீதம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். 60-ம் நாள், தேவைப்பட்டால் தாக்குதல் இருக்கும் பட்சத்தில் மேற்காணும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் மீண்டும் தெளிக்கலாம்.

இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தையும், விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து கடைபிடித்து மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தி, மக்காச்சோள விளைச்சலில், அதிக மகசூல் பெற்று பயனடையலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News