உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் பூ, பொரி மற்றும் தர்பூசணி விற்பனை மும்முரமாக நடந்து வந்தது.

தஞ்சையில், பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

Published On 2023-10-22 10:47 GMT   |   Update On 2023-10-22 10:47 GMT
  • செவ்வந்தி கிலோ ரூ.350, அரளி ரூ.500, ஆப்பிள் ரோஸ் ரூ.300-க்கு விற்பனையானது.
  • முகூர்த்த நாள் மற்றும் நாளை சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை என்பதால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.

தஞ்சாவூர்:

ஆயுதபூஜை பண்டிகை தமிழ்நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.

பொதுவாக, ஆயுதபூஜை நாளில், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

பூக்கள் நிறைந்த அலங்காரத்துடன் அலுவலகங்கள் மிளிர, பழங்கள், பொரி மற்றும் கடலைகள் கடவுள்களுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கும்.

அந்த வகையில், தஞ்சையில் இன்று பூக்கள், பழங்கள், பூஜை பொருட்கள், தேங்காய், பூசணி, பொரி, கடலை விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

இதேபோல் தஞ்சை பூக்கார தெரு மற்றும் விளார் சாலை தனியார் மண்டபம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.

திண்டுக்கல், மதுரை, சேலம், ஓசூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

பூக்கள் வரத்து அதிகமாக இருந்தாலும் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக பூ மார்க்கெட்டில் இன்று பல்வேறு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

2 நாட்களுக்கு முன்பு மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று கணிசமாக உயர்ந்து கிலோ ரூ.1000-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் கனகாம்பரம் , முல்லை தலா ரூ.1000, செவ்வந்தி கிலோ ரூ.350, அரளி ரூ.500, ஆப்பிள் ரோஸ் ரூ.300-க்கு விற்பனையானது.

இந்த பூக்களின் விலையும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விற்கப்பட்டதை விட தற்போது விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, மார்க்கெட்டுக்கு இன்று பூக்களின் வரத்து அதிகமாக உள்ளது.

இன்று முகூர்த்த நாள் மற்றும் நாளை சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை என்பதால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.

இதனால் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது என்றனர்.

Tags:    

Similar News