உள்ளூர் செய்திகள்

தியாகதுருகத்தில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 10 பவுன் நகை கொள்ளை

Published On 2022-08-02 08:19 GMT   |   Update On 2022-08-02 08:19 GMT
  • தியாகதுருகத்தில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
  • வீட்டின் வராண்டாவில் செல்வியும், வீட்டில் உள்ள அறைகளில் மற்றவர்களும் தனித்தனியாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட புக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கப்பன் (வயது 62) இவர் நேற்று இரவு தனது மனைவி செல்வி (58), மகன் குமார், மருமகள் பிரபாவதி ஆகியோரருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் வராண்டாவில் செல்வியும், வீட்டில் உள்ள அறைகளில் மற்றவர்களும் தனித்தனியாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் மரக்கதவை கடப்பாரையால் நெம்பி திறந்து வீட்டில் படுத்து இருந்த செல்வின் கழுத்தில் இருந்த தாலி செயின் மற்றும் அதில் இருந்த தாலி, குண்டு உள்ளிட்ட 10 பவுன் நகையை பறித்துச் சென்றனர். அப்போது செல்வியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் எழுந்து வருவதற்குள் மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்கம் வழியாக தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில் வீட்டின் முன்பக்கத்தில் உள்ள ஜன்னல் திறந்திருந்ததாகவும், அந்த ஜன்னல் வழியாக நோட்டமிட்ட மர்ம நபர்கள் செல்வி வீட்டில் படுத்து இருந்ததை பார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து செல்வி இயற்கை உபாதை கழிக்க சென்றபோது மரக்கதவில் இருந்த தாழ்பாளை திறந்து விட்டு மர்ம நபர்கள் வீட்டில் பதுங்கிக் கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து செல்வி மீண்டும் வந்து படுத்த பிறகு மர்ம நபர்கள் செல்வியின் கழுத்தில் இருந்த நகையை பறித்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த தடவியல் நிபுணர் ராஜா கைரேகை பதிவுகளை ஆய்வு செய்தார். மேலும் இது குறித்து தியாகதுருகம் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News