உள்ளூர் செய்திகள்

கயல்விழி வினோதினி தத்ரூபமாக இட்ட பட்டுபுடவை கோலம்.

கொள்ளிடத்தில், பட்டுபுடவை போல் வண்ண கோலமிட்டு அசத்திய பெண்

Published On 2023-01-17 09:05 GMT   |   Update On 2023-01-17 09:06 GMT
  • ஒவ்வொரு வர்ணஜாலங்களில் கோலமெட்டு வருவதை அவ்வழியே செல்பவர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
  • கோலம் போடுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வருகிறது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ரெயில்வே சாலையை சேர்ந்தவர் கயல்விழி வினோதினி.

இவர் மார்கழி மாதம் பிறந்த நாளிலிருந்து தினந்தோறும் வகை வகையான வண்ண வண்ண கோலங்கள் போட்டு அவ்வழியே செல்பவர்களை கவரும் வகையில் கோலமிட்டு வருகிறார்.

மார்கழி மாதம் தொடங்கிய முதல் நாள் அதிகாலை மார்கழி மாதத்தை வரவேற்கும் விதமாக வரைந்திருந்த கோலம் அனைவரையும் கவர்ந்தது.

இதே போல் ஒவ்வொரு நாளும் அதிகாலை வேளையில் ஒவ்வொரு வர்ணஜாலங்களில் கோலமெட்டு வருவதை அவ்வழியே செல்பவர்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

தொடர்ந்து அதிகாலை வேளையில் கோலமிட்டு வரும் கயல்விழி வினோதினி புத்தாண்டை வரவேற்கும் விதமாக வாசலில் அழகிய கோலமிட்டு இருந்தார்.

இதேபோல் தைப்பொங்கல் அன்று வாசல் முன்பு போட்ட கோலமும் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்ததாக அமைந்தது.

இந்நிலையில் மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று காலை கயல்விழி வினோதினி போட்ட கோலம் வித்யாசமாக அமைந்திருந்தது.

பட்டுப் புடவையை தரையில் விரித்து வைத்தது போல் போடப்பட்ட கோலம் அதில் அந்தப் புடவையின் விலையையும் குறிப்பிட்டு இருப்பது அனைவரையும் கவர்ந்தது.

இதை பார்ப்பவர்கள் கோலம் என்பதற்கு பதிலாக பட்டுப் புடவை தரையில் கிடப்பதாக எண்ணி ஏமாந்து பின்னர் தான் அது கோலம் என்று கண்டுபிடித்தனர்.

அந்த அளவுக்கு பட்டுப் புடவை கோலம் அமைந்திருந்தது.

இதுகுறித்து கயல்விழிவினோதினி கூறுகையில், கோலம் போடுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வருகிறது.

எனது கோலங்கள் அழகாக இருப்பதால் அரசு விழாக்கள் நடக்கும் இடங்களுக்கும் நான் சென்று கோலம் போட்டு வருகிறேன். தொடர்ந்து வருடத்தில் உள்ள அனைத்து நாட்களிலும் கோலம் போடுவதற்கு ஆசை தான்.

ஆனால் விருப்பம் இருந்தாலும் அந்த முழு கலை திறனை மார்கழி மாதத்தில் மட்டுமே சிறப்பாக வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு அமைந்துள்ளது.

இதனால் கோலங்களை ஆர்வத்துடன் வாசலில் போட்டு வருகிறேன்.

இந்த கோலத்தை பார்ப்பவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்தி விட்டுச் செல்கின்றனர். வாசலில் கோலம் போடுவது ஒரு கலையாக இருந்து வருகிறது.

Tags:    

Similar News