உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமங்களில் புகுந்த யானைகள் கூட்டம்

Published On 2023-07-11 08:39 GMT   |   Update On 2023-07-11 08:39 GMT
  • காட்டு யானைகள் பலாப்பழங்களை ருசிப்பதற்காக, அந்த பகுதிகளில் முகாமிட்டு உள்ளன.
  • யானைகளின் அச்சுறுத்தலுக்கு நிரந்தர முடிவுகட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அரவேணு,

கோத்தகிரி - மேட்டுப்பாளையம் ரோட்டில் குஞ்சப்பனை, கோழிக்கரை, சுண்டப்பட்டி ஆகிய கிராமங்கள் உண்டு. இவை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ளன. இங்கு அதிக அளவில் பலாமரங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. தற்போது அங்கு பலாப்பழம் சீசன் தொடங்கி உள்ளது.

எனவே காட்டு யானைகள் பலாப்பழங்களை ருசிப்பதற்காக, அந்த பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. இவை அங்கு உள்ள பலாமரங்களில் முன்னங்காலை வைத்து, தும்பிக்கையால் பழங்களை பறித்து தின்று பசியாறி வருகின்றன.

அதிலும் குறிப்பாக கோழிக்கரை கிராமத்தில் யானைகளின் நடமாட்டம் சற்று அதிகமாகவே உள்ளது. அவை கிராமங்களில் புகுந்து அங்கும் இங்குமாக நடமாட யபடி உள்ளன.

குஞ்சப்பனை, கோழிக்கரை, சுண்டப்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள் பெரும்பாலும் காட்டு சாலைகளையே பயன்படுத்துகின்றனர். ஆனாலும் அங்கு காட்டு யானைகளின் நடமாட்டம் மாலை நேரம் முதல் தொடங்கி விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் கிராம மக்கள், வீட்டுக்கு வெளியே செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே குஞ்சப்பனை, கோழிக்கரை, சுண்டப்பட்டி ஆகிய கிராமங்களில் முகாமிட்டு தங்கி உள்ள காட்டு யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வேண்டும். அந்த பகுதியில் யானைகளின் அச்சுறுத்தலுக்கு நிரந்தர முடிவுகட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News