சேலத்தில் தற்கொலை செய்த கோவை தம்பதி மகள்களுக்கு உருக்கமான கடிதம்- கடன் பிரச்சனையில் விபரீத முடிவு
- என் பிரச்சினைகளை அம்மாவிடம் சொல்லி நாங்கள் எவ்வகையிலும் மீள முடியாது என்று நன்றாக தெரிந்ததால் இந்த முடிவை எடுத்தோம்.
- சாவிற்கு யாரும் பொறுப்பு இல்லை. நாங்களே சுயமாக எடுத்த முடிவு என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
சேலம்:
கோவை பீளமேடு கோபால் நகர் பிஎஸ்எஸ் அவன்யூ பகுதியை சேர்ந்தவர் மோகன்பாபு (வயது 57). இவரது மனைவி ஜெயந்தி (50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மோகன்பாபுவும் அவரது மனைவியும் கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்து மாயமாகினர். இதுகுறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 11-ந் தேதி அதிகாலையில் மோகன்பாபு தனது மனைவியுடன் சேலம் வந்துள்ளார். பின்னர் புது பஸ்நிலையம் அருகேயுள்ள விடுதியில் ஏசி அறை எடுத்து தங்கியுள்ளனர். அங்கு மறுநாள் (12-ந் தேதி) அறையில் இருந்து இருவரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது முன்பகுதியில் உள்ள அறையில் ஜெயந்தியும், கழிவறையில் மோகன்பாபுவும் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. அங்கு மோகன்பாபு எழுதி வைத்திருந்த உருக்கமான 3 கடிதத்தையும் போலீசார் மீட்டனர். அதில் கூறியிருப்பதாவது:-
அன்பான என் மகள்கள் ரம்யா, அபர்ணா ஆகிய இருவருக்கும் எழுதிக் கொள்வது என்னவென்றால் முழுக்க முழுக்க இந்த முடிவிற்கு உங்கள் அப்பாவான நானே காரணம். நீங்கள் ஒன்றை புரிந்து கொள்வது இந்த தருணத்தில் நல்லது. நான் எப்பொழுதும் உங்கள் இருவரையும் மற்றும் குடும்பத்தை பற்றி சொல்லியோ எங்கும் கடன் பெறவில்லை. நான் யாருக்கும் உங்கள் செல்போன் நம்பர்கள் கொடுக்கவில்லை. நான் கடன் பெற்றது 90 சதவீதம் உங்கள் அம்மாவிற்கு தெரியாது.
இப்பொழுது என் பிரச்சினைகளை அம்மாவிடம் சொல்லி நாங்கள் எவ்வகையிலும் மீள முடியாது என்று நன்றாக தெரிந்ததால் இந்த முடிவை எடுத்தோம்.
என்னை நம்பி மட்டும் கடன் கொடுத்தார்களே தவிர வேறு யாரையும் நம்பி கடன் கொடுக்கவில்லை. வாங்கிய கடனுக்கு மேல் நான் வட்டி கட்டி விட்டேன். வட்டி வட்டி என்று மேலும் கடன் வாங்கி வட்டி கொடுத்ததால் தான் இந்த நிலைமை என்று புரிந்து கொண்டேன். ஆகையால் இனி தாங்க முடியாது என்றுதான் இந்த முடிவு. எங்களை மன்னித்து விடுங்கள். நான் வாங்கிய கடனுக்கு என்னைத் தவிர வேறு யாரும் பொறுப்பு இல்லை.
நீங்கள் இருவரும் உங்கள் குடும்பத்தாரிடம் நன்றாக நடந்து கொள்வீர்கள். உங்கள் இருவருடைய மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரை தாய்-தந்தையாக நினைத்து அவர்களை நன்றாக எந்த காலத்திற்கும் பார்த்துக் கொள்ளுங்கள். எங்களது உடலை இந்த ஊரிலேயே தகனம் செய்து விடவும்.
இன்னொரு கடிதத்தில், அம்மா எழுதிக் கொள்வது, என்னை பற்றி கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கு நல்ல கணவர்கள் மற்றும் மாமனார், மாமியார் அமைந்து உள்ளார்கள். நீங்கள் இருவரும் மற்றும் உங்கள் குடும்பத்தாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.
இன்னொரு கடிதத்தில், காவல்துறை அதிகாரி அவர்களுக்கு மோகன் பாபு ஆகிய நானும் எம்.ஜெயந்தி ஆகிய என் மனைவியும் எழுதிக்கொள்வது. இந்த சாவிற்கு யாரும் பொறுப்பு இல்லை. நாங்களே சுயமாக எடுத்த முடிவு என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இது முழுக்க கடன் பிரச்சினையால் எடுத்தது. இவ்வாறு அவர்கள் எழுதியுள்ளனர். உடலை மீட்ட பள்ளப்பட்டி போலீசார் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை மகள்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து இருவரின் உடலும் சேலம் காக்காயன் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.