- ஒரு ஆடு மங்கம்மாளை முட்டியது.
- தவறி கீழே விழுந்த மங்கம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காவாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சப்பன். விவசாயியான இவரது மனைவி மங்கம்மாள் (வயது65). இவர்கள் ஆடுகளை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஆடுகளை கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து மாற்று இடத்திற்கு கொண்டு செல்லுமாறு மஞ்சப்பன் தனது மனைவி மங்கம்மாளிடம் தெரிவித்தார்.
அவரும் ஆடுகளை கயிற்றால் கட்டி வேறு இடத்திற்கு கொண்டு சென்றார். அப்போது ஒரு ஆடு மங்கம்மாளை முட்டியது.
இதில் தவறி கீழே விழுந்த மங்கம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மஞ்சப்பன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மங்கம்மாள் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மங்கம்மாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.