விபத்துகள் நடைபெறாமல் இருக்க நள்ளிரவில் ஆடு, கோழிகளை பலியிட்டு வினோத வழிபாடு
- திண்டுக்கல் அருகில் உள்ள ராஜக்காபட்டி அங்குநகரில் அடிக்கடி சாலை விபத்துகள் நடந்து வந்தன.
- நள்ளிரவு ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு அதன் ஈரல் மற்றும் சுருட்டு ஆகியவற்றை சாமிக்கு படையலிட்டு பூஜைகள் செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள ராஜக்காபட்டி அங்குநகரில் அடிக்கடி சாலை விபத்துகள் நடந்து வந்தன. இதனால் உயிர்பலிகளும், உடல் உறுப்புகள் இழப்பும் ஏற்பட்டது. இதனை தடுக்க அப்பகுதி மக்கள் சாலையோரத்தில் ஜடாமுனீஸ்வரர் பீடம் எழுப்பி வழிபட்டு வந்தனர். தொடர்ந்து சாமிக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்ததால் விபத்துகள் குறைந்தது.
இதனைதொடர்ந்து முனீஸ்வரருக்கு வருடந்தோறும் ஆடிப்பெருக்கு நாளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்படி நேற்று நள்ளிரவு ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு அதன் ஈரல் மற்றும் சுருட்டு ஆகியவற்றை சாமிக்கு படையலிட்டு பூஜைகள் செய்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சாமிக்கு பலியிடப்பட்ட ஆடு, கோழிகளை வைத்து அசைவ உணவு தயாரிக்கப்பட்டு அதனை பக்தர்களுக்கு வழங்கினர். இந்த விருந்து விடியவிடிய பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லுக்கு ராஜக்காபட்டி முக்கிய சாலையாக இருந்து வந்தது. செட்டிநாயக்கன்பட்டி, முடக்குராஜக்காபட்டி, கள்ளிப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதியை சேர்ந்தவர்கள் இந்த சாலையை பிரதனமாக பயன்படுத்தி வந்தனர். திண்டுக்கல்-கரூர் சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கியபிறகு இது தனித்தீவாக காட்சியளிக்கிறது.