உங்களை திருப்திபடுத்தும் வேலை தான் அப்துல் கலாம் போன்று உருவாக்கும்- முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன்
- பல்வேறு பிரிவுகளில் 862 பேருக்கு இளங்கலை பட்டங்களும், 74 பேருக்கு முதுகலை பட்டங்களும் வழங்கப்பட்டன.
- அண்ணா பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்ற 16 மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
சென்னையில் ஜேப்பியார் மற்றும் ஜேப்பியார் எஸ்ஆர்ஆர் பொறியியல் கல்லூரிகளின் 18வது பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
ஜேப்பியார் கல்விக்குழும நிறுவனர் மறைந்த டாக்டர். ஜேப்பியார் ஆசியுடன் பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ரெஜினா ஜே முரளி தலைமை தாங்கினார்.
இதில் பல்வேறு பிரிவுகளில் 862 பேருக்கு இளங்கலை பட்டங்களும், 74 பேருக்கு முதுகலை பட்டங்களும் வழங்கப்பட்டன.
முதுகலை பொறியியலில் கணினி அறிவியல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி சுபவர்ஷினி மற்றும் அண்ணா பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்ற 16 மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் உரையாற்றிய நம்பி நாராயணன், "உங்களை திருப்திப்படுத்தும் செயலை செய்வதன் மூலமாக மட்டுமே நீங்கள் கலாம் போன்று உருவாக முடியும்" என மாணவர்களுக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் அறிவுரை வழங்கினார்.
அப்போது அவர் மேலும் கூறியதாவது:-
மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு இல்லாமல் எலக்ட்ரானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் பொறியியல் படிப்புகள் இல்லை.
ஏனெனில் அந்த பொறியியல் படிப்புகளில் பயன்படுத்தும் கருவிகளை உருவாக்குவது மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு. தான் பொறியியல் பட்டம் பெற்ற பிறகு தகுதி வாய்ந்த பொறியாளர் என்கிற எண்ணம் வந்தது. அதற்கு தான் செய்த பிராஜெக்ட் தான் காரணம்.
பட்டம் பெற்ற உடன் பணம் சம்பாதிக்கும் நிரப்பந்தம் ஏற்படுவதால் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிக்கு சேர்கின்றனர். இதில் பெரும்பாலானோர் கூட்டல் கழித்தல் வேலை தான் செய்கின்றனர்.
செய்யும் பணி திருப்தி தரக்கூடியதாக இருக்க வேண்டும்.
வாழ்வில் முக்கியமானது உங்களை உருவாக்கும் சிறந்த திட்டங்கள் தான். அதனை கண்டறிய வேண்டும். உங்களை திருப்திபடுத்தும் வேலை தான் உங்களை அப்துல் கலாம் போன்று உருவாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.