உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் சாலைகளில் விழுந்த மரங்களை இரவோடு இரவாக அப்புறப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்
- கொட்டும் மழையில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக பணியாற்றினர்.
- பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 5 நாட்களாக இடைவிடாமல் தொடர்ந்து காற்றுடன் மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் லேசான மழையில் இரவு நேரங்களில் கன மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர், பந்தலூர், மஞ்சூர், எடக்காடு, பார்சன்ஸ் வேலி, நடுவட்டம் போன்ற பகுதிகளில்உள்ள சாலைகளில் பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன.
அவ்வாறு விழுந்த மரங்களை உதகை, கூடலூர் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து இரவோடு இரவாக சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். அதேபோல் அவலாஞ்சி பகுதியில் கொட்டும் மழையில் மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக பணியாற்றினர்.