உள்ளூர் செய்திகள்

மறைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் குடும்பத்திற்கு நிதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா வழங்கினார்.

இறந்த சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு நிதியுதவி

Published On 2022-08-23 09:31 GMT   |   Update On 2022-08-23 09:31 GMT
  • பாதிப்படைந்த 50 காவலர் குடும்பங்களுக்கு இதுவரை ரூ. 2 கோடியே 86 லட்சத்து 32 ஆயிரத்து 405 வழங்கப்பட்டுள்ளது.
  • பத்தாவது பங்களிப்பாக கடந்த மூன்று மாதங்களில் மறைந்த 5 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு தலா ரூ.7 லட்சத்து 6000 பங்களிப்பு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு காவல்துறையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக முதல் முதலாக இரண்டாம் நிலை காவலராக 1993-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு ஒரே ஆண்டில் அதாவது ஜூன் 9 ,16 மற்றும் அக்டோபர் 25 ஆகிய தேதிகளில் வெவ்வேறு மாவட்டங்களில் சுமார் 3500 காவலர்கள் பயிற்சி பெற்றனர்.

இந்த நிலையில் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கடந்த 2019-ம் ஆண்டு வாட்ஸ் அப் குழு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வாட்ஸ் அப் குழு மூலம் காக்கும் கரங்கள் என்ற பெயரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை இறந்த காவலர்களுக்கு 10 பங்களிப்பு பகிர்ந்து அளித்து அதில் மறைந்த மற்றும் பாதிப்படைந்த 50 காவலர் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.2 கோடியே 86 லட்சத்து 32 ஆயிரத்து 405 வழங்கப்பட்டு உள்ளது.

இதில் பத்தாவது பங்களிப்பாக கடந்த மூன்று மாதங்களில் மறைந்த 5 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு தலா ரூ.7 லட்சத்து 6000 பங்களிப்பு அளிக்கப்பட்டது.

இதில் தஞ்சை மாவட்டத்தில் மறைந்த தஞ்சை நகர போக்குவரத்து புலன் விசாரணை பிரிவில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன் குடும்பத்திற்கு ரூ.7 லட்சத்து 6000 வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

மறைந்த முருகேசன் மனைவி தனரேகா, மகன்கள் ஜெகன், ஆதித்யா ஆகியோரிடம் அந்த நிதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 1993-ம் ஆண்டு பேட்ஜ் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News