திண்டுக்கல் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்டபயனாளிகள் பயன்பெற வாய்ப்பு கலெக்டர் விசாகன் தகவல்
- உழவன் பாதுகாப்பு திட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் சார்பு உறுப்பினர்கள் உள்ளனர்.
- மூலஉறுப்பினர்களுடன் மனைவி அல்லது கணவர், குழந்தைகள், இறந்த மகனின் மனைவி மற்றும் குழந்தைகள், பெற்றோர் ஆகியோர் சார்பு உறுப்பினர்களாக இத்திட்டத்தின்கீழ் நிதிஉதவி பெறலாம்.
திண்டுக்கல்:
முதல்-அமைச்சர் உழவர்பாதுகாப்பு திட்டத்தின்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து சமூகபாதுகாப்பு திட்ட தனிவட்டாட்சியர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தில் 10லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் சார்பு உறுப்பினர்கள் உள்ளனர்.
திருமண உதவி, கல்வி உதவி, விபத்து நிதிஉதவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடர்பாக கிராமங்களில் பொதுமக்களிடையே போதிய அளவு விழிப்புணர்வு இல்லாததால் குறைந்த அளவு விண்ணப்பங்களே வரப்படுகிறது.
இத்திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு நிதிஉதவி திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2.5 ஏக்கருக்கு மேற்படாத நன்செய் நிலங்கள் அல்லது 5 ஏக்கருக்கு மேற்படாத புன்செய் நிலங்கள் சொந்தமாக வைத்திருக்க வேண்டும். அதில் நேரடியாக பயிர்செய்யும் 18 முதல் 65 வயது வரை உள்ள சிறுகுறு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஆகியோர் இந்த திட்டத்தின்கீழ் உறுப்பினராக பதிவு செய்ய தகுதியுடைவர்கள்.
மேலும் அவர்களை சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்களும் பதிவு செய்யலாம். விவசாயம் என்பது தோட்டக்கலை, பட்டுவளர்ப்பு, கால்நடைவளர்ப்பு மற்றும் பால்பண்ணை, தீவனபயிர்வளர்ப்பு, மேய்ச்சல், நாற்றாங்கல் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன்பிடித்தல் உள்ளிட்ட தொழில்களை உள்ளடக்கியது.
இதில் மூலஉறுப்பினர்களுடன் மனைவி அல்லது கணவர், குழந்தைகள், இறந்த மகனின் மனைவி மற்றும் குழந்தைகள், பெற்றோர் ஆகியோர் சார்பு உறுப்பினர்களாக இத்திட்டத்தின்கீழ் நிதிஉதவி பெறலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சமூகபாதுகாப்பு திட்ட தனிவட்டாட்சியர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.