உள்ளூர் செய்திகள்

வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் நல்லேர் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விவசாயம் செழிக்க வேண்டி நல்லேர் பூட்டி வணங்கிய தஞ்சை விவசாயிகள்

Published On 2023-04-14 09:58 GMT   |   Update On 2023-04-14 09:58 GMT
  • விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகள் மட்டுமன்றி மண்ணும், மக்களும் நலம் பெற வேண்டும்.
  • பூட்டப்பட்ட நல்லேர் மூலம் விவசாயிகளின் வயலில் ஏர் ஓட்டினர்.

தஞ்சாவூர்:

விவசாயிகள் சித்திரை முதல் நாளையே விவசாயத்துக்கு உரிய புத்தாண்டாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

சித்திரை மாதத்திலிருந்து தான் விவசாய பணிகளை மேற்கொள்வதற்கான சரியான பருவம் தொடங்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாய பணிகள் சிறப்பாக முடிந்து நல்ல விளைச்சலை கொடுத்தமைக்கு நன்றி சொல்லும் விதமாக தை முதல் நாளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

அதே போல் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டில் புதிய பருவத்தை வரவேற்கும் விதமாக நல்லேர் பூட்டி வணங்கி கொண்டாடி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டத்தில் சித்திரை முதல் நாளில் விவசாயிகள் நல்லேர் பூட்டி வணங்குகின்றனர்.

அதன்படி இன்று தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன் குடிக்காடு கிராமத்தில் சித்திரை திருவிழாவின் தொடக்கமாக நல்லேர் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிதாகத் தொடங்க உள்ள விவசாய பணிகளுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட இயற்கை தொடர்பிலான எந்த பிரச்னையும் வராமல் சிறப்பாக நடைபெறவும், விளைச்சல் அமோகமாக இருக்கவும், விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகள் மட்டுமன்றி மண்ணும் மக்களும் நலம் பெற வேண்டும் என்பதற்காக வயல் பகுதிகளில் வைத்து உழவு மாடுகளில் ஏர் கட்டி, வாழை இலையில் பழங்கள், விதை பொருள்கள், இனிப்பு கலந்த அரிசி ஆகியவற்றைப் படைத்து வணங்கினர்.

பின்னர் பூட்டப்பட்ட நல்லேர் மூலம் விவசாயிகளின் வயலில் ஏர் ஓட்டினர்.

இதையடுத்து விதைப் பயிர்கள் ஊன்றினர்.

இதே போல் தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் குடும்பத்தோடு திரண்டு நல்லேர் பூட்டி வணங்கினர். 

Tags:    

Similar News