உள்ளூர் செய்திகள்

மதுரையில் கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து வந்த போலி டாக்டர் கைது

Published On 2023-04-23 07:47 GMT   |   Update On 2023-04-23 07:47 GMT
  • பல கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து சிகிச்சை அளித்ததும் உறுதி செய்யப்பட்டது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ராஜசேகரனை கைது செய்தனர்.

மதுரை:

மதுரை முரட்டான்பத்திரி பகுதியில் போலி டாக்டர் ஒருவர் வீட்டில் மருத்துவம் பார்த்து வருவதாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து புகார் சம்பந்தமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் மருத்துவத் துறை இணை இயக்குநர் செல்வராஜ் தலைமையில் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் இருசப்பன் மற்றும் மருந்து ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் முரட்டான்பத்திரி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது புதுஜெயில் ரோடு மில் காலனியில் வசிக்கும் ராஜ சேகரன் (வயது 48) என்பவர் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் ராஜசேகரன் டாக்டருக்கு படிக்கவில்லை என்பதும், அவர் மதுரை நரிமேடு பகுதியில் செயல் பட்டு வரும் ஒரு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை பிரிவில் மருத்துவ உதவியாளராக வேலை பார்த்து வந்தார் என்பதும், இந்த அனுபவத்தின் மூலம் அவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது.

இதுமட்டுமின்றி அவர் பல கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து சிகிச்சை அளித்ததும் உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக மருத்து வக்குழுவினர் கரிமேடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ராஜசேகரனை கைது செய்தனர்.

Tags:    

Similar News