கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்த கிராம மக்கள்.
கோவில் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரிப்பு: நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு
- 100 ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு, அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது.
- மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் கிராம மக்கள் தனித்தனியாக மனு அளித்தனர்.
தருமபுரி,
தருமபுரி அடுத்த அன்னசாகரம் கிராமத்தில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான விநாயகர் சிவசுப்பிரமணியசாமி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமாக அருகில் உள்ள இடத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு, அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது.
அதில் அந்த மக்கள் வீடு கட்டி, பல தலைமுறைகளாக தற்பொழுது வரை வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியைச் சார்ந்த ஒருவர் கோவில் நிலம் முழுவதையும், ஆக்கிரமிப்பு செய்து, இறந்து போன தந்தை பெயரில் போலியாக ஆவணங்களை தயாரித்து உள்ளார்.
தொடர்ந்து கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டி வந்துள்ளார். ஆனால் அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டி வசித்து வரும் கிராம மக்களை, கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, போலியாக பட்டா பெற்றுள்ளதாக பல்வேறு அலுவலகங்களில் மனு கொடுத்தும், தொடர்ந்து கிராம மக்களை மிரட்டியும் வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்து சில நாட்களுக்கு முன்பு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சார் ஆட்சியர் இந்த பகுதிகளை விசாரணை செய்து கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட இடம் அரசு வழங்கியது தான் என அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதையடுத்து அரசு நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என கூறி அன்னசாகரம் கிராமத்தைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் தனித்தனியாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் கிராம மக்கள் தனித்தனியாக மனு அளித்தனர்.
கிராம மக்களுக்கு உரிய பாதுகாப்பை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.