பாவூர்சத்திரம் அருகே பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தால் பரபரப்பு
- சந்தனகுமார்பட்டியில் தனி நபர் ஒருவர் ஊரின் பெயர் பலகை வைத்ததாக கூறப்படுகிறது.
- காலையில் தொடங்கிய போராட்டமானது மாலை 5 மணி வரை நீடித்தது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாடியனூர், சந்தனகுமார்பட்டி ஆகிய பகுதி பொதுமக்கள் இடையே ஊர் பெயர் பலகை வைப்பது தொடர்பாக கடந்த சில மாதங்களாக பிரச்சினை இருந்து வருகிறது.
தென்காசி தாசில்தார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஏற்கனவே சமாதான கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் கூட்டத்தில் அரசு அனுமதி இன்றி வேறு பலகை வைக்க கூடாது என முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சந்தனகுமார்பட்டியில் தனி நபர் ஒருவர் ஊரின் பெயர் பலகை வைத்ததாக கூறப்படுகிறது. அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறி 40-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று கூடி திடீரென நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும் தாசில்தார் வந்து முழுமையான தகவல் தெரிவித்தால் தான் கலைந்து செல்வோம் என தெரிவித்ததால் காலையில் தொடங்கிய போராட்டமானது மாலை 5 மணி வரை நீடித்தது. தென்காசி தாசில்தார் சுப்பையன்,வருவாய் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரி கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு 25 நாட்களுக்குள் பெயர் பலகை தொடர்பாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கிருந்து உண்ணாவிரதத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.