ஒயிட் லாங் கத்திரிக்காய் அமோக விளைச்சல்
- பாலக்கோடு பகுதியில் ஒயிட் லாங் கத்திரிக்காய் அமோக விளைச்சல் கண்டது.-
- விலை சரிவால் விவசாயிகள் கவலை
தருமபுரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது தற்போது விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், மொரப்பூர், அரூர், கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.
அதிலும் குறிப்பாக பாலக்கோடு பகுதியை சுற்றியுள்ள பாலக்கோடு, புளிக்கரை, மல்லாபுரம், திருமல்வாடி, கரகூர், பெல்ரம்பட்டி, ஐந்து மைல்கள், அதக்கப்பாடி, பாப்பாரப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் கிணற்று நீர் பாசனம் மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் தக்காளி, கத்தரி, வெண்டை, குடை மிளகாய், முள்ளங்கி உள்ளிட்டவற்றை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். தற்போது இப்பகுதியில் வெளிமாநிலம், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஒயிட் லாங் கத்தரிக்காய் பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு விளைவிக்கப்படும் கத்தரிக்காய்க்கு கேரள மாநிலத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் இங்கு அறுவடை செய்யப்படும் கத்தரிக்காய் அனைத்தும் தினமும் 10 டன்னிற்கு மேல் கேரள மாநிலத்திற்கும், வெளிநாட்டிற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் விழா காலங்கள் எதுவும் இல்லாததால் விலை குறைந்து உள்ளதாக விவசாயி கவலை தெரி வித்தார்
இதுகுறித்து கத்தரிக்காய் விவசாயி ஒருவர் கூறியதாவது:
ஒரு ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் வரை செலவு செய்து 3 ஏக்கர் ஒயிட் லாங் கத்தரிக்காய் பயிரிட்டு உள்ளோம். இயற்கை உரங்களான கோழி எருவு பசுமாட்டு எருவு இட்டு நாற்று நட்டு செடிகள் வளரும்போது செடிகளுக்கு இடையில் சவுக்கு கம்புகள் நட்டு அதில் செடிகள் சாயாமல் இருக்க ஸ்டே கம்பிகள் மூலம் செடிகளை கட்டி பாதுகாக்கப்படுகிறது.
60 நாட்களில் அறுவ–டைக்கு தயாராகி விடும் சுமார் 6 மாதம் முதல் 7 மாதம் வரை காய்கள் கிடைக்கும் ஏக்கருக்கு ஒரு வாரத்திற்கு 4 டன் கத்திரிக்காய் அறுவடை செய்யப்படுகிறது. இந்த ஒயிட் லாங் கத்திரிக்காய் தொடர்ந்து பயிரிட்டு வருகிறேன். கடந்த மாதம் வரை கத்திரிக்காய் ஒரு டன் ரூ 30 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது ஆனால் தற்போது ஒரு டன் ரூ. 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை விற்பனையாகிறது.
காய் அறுவடை கூலி, மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல வாகன வாடகை உள்ளிட்டவற்றை ஒப்பந்ததாரர்கள் ஏற்றுக் கொள்வதால் சற்று ஆறுதலாக உள்ளது என தெரிவித்தார்.