உள்ளூர் செய்திகள்

தரைமட்ட பாலம் அமைத்து தரக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

Published On 2023-11-08 13:22 IST   |   Update On 2023-11-08 13:22:00 IST
  • பூலப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • போலீசார் சம்பவ இடம் வந்து பொதுமக்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

பவானி:

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூலப்பாளையம் அருகில் அருந்ததியர் எல்லப் பாளையம் அமைந்து உள்ளது.

பெரியபுலியூர், தயிர்பாளையம் போன்ற பகுதியில் இருந்து வரும் ஏரி தண்ணீர் மழை காலத்தில் நிரம்பிய பின் ஊருக்குள் புகுந்து அவ்வப்போது மழை காலத்தில் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் நலனுக்காக தரைப்பாலம் 2 கட்டி பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்துள்ளது.

இதனையடுத்து தரைமட்ட பாலத்தை புதிதாக கட்டி கொடுக்க வேண்டி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை பவானி-கவுந்தப்பாடி மெயின் ரோடு பூலப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார், யூனியன் சேர்மன் பிரகாஷ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசார் சம்பவ இடம் இருந்து வந்து கூடியிருந்த பொது மக்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சேதம் அடைந்த பாலத்திற்கு புதிய பாலம் கட்டி கொடுக்க உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் பவானி-கவுந்தப்பாடி ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News