உள்ளூர் செய்திகள்

ஒலி, மாசற்ற தீபாவளி கொண்டாட கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2022-10-21 09:47 GMT   |   Update On 2022-10-21 09:47 GMT
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருள்களை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • தீபாவளி நாளன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

தீபாவளி திருநாளை விபத்து, ஒலி, மாசு இல்லாத தீபாவளியாக கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

தீபாவளி பண்டிகையை யொட்டி மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்வர். பட்டாசு வெடிப்பதால் நிலம், நீர், காற்று மாசடைகிறது. மேலும் பட்டாசு ஒலி, மாசு காரணமாக குழந்தைகள், பெரியவர், நோய் பாதித்தோர் பெரும் பாதிப்புக்கும் ஆளாக நேரிடுகிறது.

எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருள்களை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தீபாவளி நாளன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தவிர குறைந்த ஒலி, குறைந்த அளவில் காற்றை மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசு களை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், திறந்த வெளியில் பொதுமக்கள் கூடி கூட்டாக பட்டாசு வெடிக்க முயற்சிக்கலாம்.

அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடிகளையும் தவிர்க்க வேண்டும். மருத்துவமனை, வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம். குடிசை பகுதி, எளிதில் தீப்பற்றும் இடங்களிலும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News