உள்ளூர் செய்திகள்

அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு

Published On 2023-04-22 09:29 GMT   |   Update On 2023-04-22 09:29 GMT
  • 3 வீடுகளில் திருட்டு நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு முனிசிபல் காலனி 3-வது கிராஸ் தியாகி குமரன் வீதியை சேர்ந்தவர் தாமோதரன் (57). ஈரோடு என்.எம்.எஸ். காம்பவுண்டில் உள்ள டெக்ஸ்டைல்சில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற தாமோதரன் மதியம் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்த போது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தது. பீரோவில் வைத்திருந்த கம்மல் தோடு, மோதிரம் என முக்கால் பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நகை, பணம் திருட்டு போய் இருந்தது.

இது குறித்து தாமோதரன் அளித்த புகாரின் பேரில் ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் திருட்டு நடந்த வீட்டில் கைரேகைகளை சேகரித்தனர்.

குடியிருப்பு பகுதியில் பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் வீரப்பன்சத்தி ரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சின்னமுத்து வீதியி ல் அடுத்தடுத்த சந்துகளில் உள்ள 2 வீடுகளில் திருட்டு நடந்துள்ளது.

ஒரு வீட்டில் வெள்ளி குத்துவிளக்கும், வெள்ளி கொலுசும் திருட்டு போயிருந்தது. மற்றொரு வீட்டில் ரூ.1 லட்சம் ரொக்க பணம் திருட்டு போயிருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் ஒரு நபர் நடந்து செல்வதும், திருட்டு நடந்த வீட்டில் இருந்து செல்வதும் பதிவாகி இருந்தது.

ஈரோடு மாநகர் பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த 3 திருட்டிலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News