கொள்ளிடம் ஆற்றங்கரையில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது.
ரெயில்வே பாலம் அருகே குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்
- குப்பைகள் ஆற்றின் பகுதியில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- ஆற்றில் குளிக்கும் மக்களுக்கு அரிப்பு, சரும பாதிப்பு ஏற்படுகிறது.
சீர்காழி:
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சமூக ஆர்வலர் ராம்பிரபு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிப்பதாவது :
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பிரதான கொள்ளிடம் ஆறு உள்ளது. இந்த கொள்ளிடம் ஆற்றின் நீர் ஆதாரத்தின் மூலம் கொள்ளிடம் கரையோரம் உள்ள மகேந்திரப்பள்ளி, காட்டூர், அளக்குடி, புளியந்துறை, புதுப்பட்டினம், தண்டேசநல்லூர், ஆச்சாள்புரம், கொள்ளிடம், மாங்கனாம்பட்டு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது.
இந்நிலையில் கொள்ளிடம் ரெயில்வே பாலத்தின் அருகில் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு கோபாலசமுத்திரம், ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 20 கிராமங்களில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டுவதற்கு மாற்றுஇடம் இல்லாததால் ஆற்றங்கரையோரம் கொட்டப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.
இவ்வாறு குப்பைகள் இறைச்சி கழிவுகள், இறந்த கால்நடைகள் கொள்ளிடம் ஆற்றின் பகுதியில் கொட்டப்படுவதால் அப்பகுதி கடும் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது.
அதோடு குப்பைகள் ஆற்று தண்ணீரில் கலந்து தண்ணீருடன் அடித்து சென்று கடலிலும் கலந்து வருகிறது.
இந்த குப்பைகள் ஆற்றில் அடித்து செல்லப்படும்போது நெகிழிகள் புதைந்து கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு ஆற்றில் குளிக்கும் மக்களுக்கு அரிப்பு போன்ற சரும பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் மாசு அடைந்த ஆற்று நீரை பருகும் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
எனவே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.