கருங்குளம் வட்டாரத்தில் மானிய விலையில் விதைகள் விநியோகம்- வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்
- கருங்குளம் வட்டாரத்திற்கு உட்பட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் மற்றும் உளுந்து விதைகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது
- விவசாயிகளும் மானிய விலையில் நெல் மற்றும் உளுந்து விதைகளை வாங்கி பயனடையுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் தெரிவித்தார்.
செய்துங்கநல்லூர்:
கருங்குளம் வட்டாரத்திற்கு உட்பட்ட செய்துங்கநல்லுர் மற்றும் வல்லநாடு வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் மற்றும் உளுந்து விதைகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விதை கிராம திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் விதைகள் அம்பை 16, கோ 51, டிகேஎம் 13, டிபிஎஸ் 5 ஆகிய ரகங்கள் கிலோவிற்கு ரூ.17.5 மற்றும் ரூ.20 மானிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் (உணவு ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பு) திட்டத்தின் கீழ் உளுந்து விதைகள் மதுரை 1, வம்பன் 8 ஆகிய ரகங்கள் கிலோவிற்கு ரூ.25 மானிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
கருங்குளம் அனைத்து வட்டாரத்திற்குட்பட்ட விவசாயிகளும் மானிய விலையில் நெல் மற்றும் உளுந்து விதைகளை வாங்கி பயனடையுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் தெரிவித்தார். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலகத்தை அணுகுமாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.