உள்ளூர் செய்திகள்

நெல்லையில் கோவில் கொடை விழாவில் தகராறு- சார்பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு

Published On 2022-10-23 08:16 GMT   |   Update On 2022-10-23 08:16 GMT
  • சமீபத்தில் டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் கொடைவிழா நடைபெற்றது.
  • தர்மர், மாதவன் மற்றும் ஆனந்த் ஆகியோர் சேர்ந்து வெங்கடேஷ் தரப்பினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

நெல்லை:

நெல்லையை அடுத்த பழைய பேட்டை சண்முகரெங்கையன் கட்டளை பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

சரமாரி தாக்குதல்

இவர் டவுன் வடக்கு ரதவீதியில் தள்ளுவண்டியில் வளையல் கடை நடத்தி வருகிறார். சமீபத்தில் டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் கொடைவிழா நடைபெற்றது. இதில் வெங்கடேசின் சகோதரர் நெல்லையப்பன், அவரது மகன் இசக்கிராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்ற பெட்டி பெருமாள் மற்றும் அவரது நண்பர்களுக்கும், இசக்கிராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிக்கேட்க வெங்கடேஷ் சென்றபோது பெட்டி பெருமாள், தர்மராஜ் என்ற தர்மர் உள்பட 4 பேர் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வெங்கடேசின் மண்டை உடைந்தது. இதையடுத்து அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக அவர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பெட்டி பெருமாள், தர்மராஜ் என்ற தர்மர், மாதவன் மற்றும் ஆனந்த் என்ற ஆனந்தகுமார் ஆகியோர் சேர்ந்து வெங்கடேஷ் தரப்பினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் தர்மராஜ் என்ற தர்மர் வள்ளியூர் சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

Tags:    

Similar News