உள்ளூர் செய்திகள்

8 மணி நேரத்துக்கு மேல் அணையாமல் எரிந்த விளக்கால் பக்தர்கள் பரவசம்

Published On 2023-01-28 09:20 GMT   |   Update On 2023-01-28 09:20 GMT
  • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன.
  • 8 மணி நேரத்திற்கும் மேலாக விளக்கு அணையாமல் எரிந்த தகவல் பக்தர்கள் மத்தியில் பரவியது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமையை யொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் பகல் 12 மணி முதல் அம்மனின் கீழ் வைக்கப்பட்டிருந்த காமாட்சி விளக்கின் சுடர் அணைந்து பின்னர் பிரகாசமாக எரிந்தது.

காற்றில் இது போன்று நடந்திருக்கும் என நினைத்த கோவில் பூசாரி, தொடர்ந்து இதே போன்று அணைந்து பின் மீண்டும் பிரகாசமாக எரிவதை பார்த்து ஆச்சரியப்பட்டார்.

அம்மன் கோவிலில் 8 மணி நேரத்திற்கும் மேலாக விளக்கு அணையாமல் எரிந்த தகவல் பக்தர்கள் மத்தியில் பரவியது. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து இந்த அதிசயத்தை பார்த்து அம்மனை பரவசத்துடன் வழிபட்டு சென்றனர்.

மேலும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து வைரலாக்கினர். இது குறித்து கோவில் பூசாரி பொன்னுசாமி கூறுகையில், காலையில் ஒரு முறை மட்டுமே எண்ணெய் ஊற்றினோம்.

ஆனால் தொடர்ந்து இதே போன்று விளக்கு அணைந்து பின்னர் சுடர்விட்டு எரிகிறது. இதை காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்றனர் என்றார்.

Tags:    

Similar News