புலிகள் காப்பக வனத்தை ஒட்டி கிராவல் மண் எடுப்பதை தடுக்க கோரிக்கை
- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
- கனரக வாகனங்களால் காண்டூர் கால்வாய்ப்பாலம் சேதம் அடைகிறது.
உடுமலை :
புலிகள் காப்பக வனத்தை ஒட்டி கிராவல் மண் எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை நீர்வள ஆதார செயற்பொறியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ரத்ன சபாபதி , செயலாளர் கனகவேல் ஆகியோர் உடுமலை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- உடுமலை வட்டம் தளி கிராமம், திருமூர்த்தி நகர் , பொன்னாளம்மன் சோலைப் பகுதியில் சட்டவிரோதமாக கிராவல்மண் எடுக்க எந்திரங்களுடன் சிலர் வந்தனர்.
விவசாயிகள் திரண்டு அதை தடுத்து நிறுத்தினர். புலிகள் காப்பகத்தின் தடை செய்யப்பட்ட பகுதிக்கு வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் அனுமதி இல்லாமல் கிராவல் மண் அள்ளுகின்றனர். கனரக வாகனங்களால் காண்டூர் கால்வாய்ப்பாலம் சேதம் அடைகிறது. எனவே அதிகாரிகள் இதை தடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.