மாமல்லபுரத்தில் "மாண்டஸ்" புயல் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்: மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரடி ஆய்வு
- படகு, வலை, மிஷின்களை பாதுகாப்பாக வைக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
- கடலோர பகுதிகளின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
மாமல்லபுரம்:
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக (மாண்டஸ்) வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்கவும், படகு, வலை, மிஷின்களை பாதுகாப்பாக வைக்கும்படியும் அறிவுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் இன்று காலை மாமல்லபுரம், தேவநேரி, கொக்கிலமேடு, வெண்புருஷம் உள்ளிட்ட கடலோர பகுதிகளின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சப்-கலெக்டர் சஜீவனா, தாசில்தார் பிரபாகரன், எஸ்வந்த்ராவ், மாமல்லபுரம் பேரூராட்சி துணை தலைவர் ராகவன், அப்பகுதி கவுன்சிலர்கள் சுகுமாரன், தேவி ராமன் உள்ளிட்ட பகுதி மக்கள் பலர் இருந்தனர்.