கடலூர் கம்மியம்பேட்டை பாலத்தின் தடுப்பு கட்டைகள் இடிந்து விழுந்து அபாயம்: வாகன ஓட்டிகள் பீதி
- 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகின்றது.
- ஒரு சில இடங்களில் உள்ளே இருக்கும் கம்பிகள் முழுவதும் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளது.
கடலூர்:
கடலூர் கம்மியம்பேட்டை சாலையில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று செல்கிறது. இந்த பாலம் வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் கடலூர் மாநகரத்திற்குள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் கடலூர் செம்மண்டலம் மற்றும் கடலூர் ஜவான்பவன் சாலை வழியாக அனைத்து கனரக வாகனங்களும் இந்த பாலம் வழியாக தான் சென்று வருகின்றது. இதன் காரணமாக இவ்வழியாக 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகின்றது. இந்நிலையில் இந்த பாலமானது கம்மியம்பேட்டை பாலத்தின் இருபுறமும் விபத்து ஏற்படாத வகையில் சிமெண்ட் தடுப்பு கட்டைகள் அமைத்து இருந்தன.
ஆனால் தற்போது சிமெண்ட் கட்டைகள் பெயர்ந்து வருகின்றது. மேலும் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிகமான அதிர்வுகள் ஏற்படுவதால் சிமெண்ட் காரைகள் சாலையில் விழுந்தும், பல இடங்களில் விரிசல் ஏற்பட்டும், ஒரு சில இடங்களில் உள்ளே இருக்கும் கம்பிகள் முழுவதும் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளது. இதனால் ெபரிய அளவிலான விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், சமூக அலுவலர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே பெரிய அளவிளான சேதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் இதில் தலையிட்டு பாலத்தின் சிமெண்ட் தடுப்பு கட்டைகளை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.