உள்ளூர் செய்திகள்

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

தேனி மாவட்டத்தில் கனமழை : வெள்ளப்பெருக்கால் சுருளி அருவியில் குளிக்க தடை

Published On 2023-05-09 05:26 GMT   |   Update On 2023-05-09 05:26 GMT
  • தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
  • சுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவ தால் மறு உத்தரவு வரும்வரை யாரும் குளிக்ககூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கூடலூர்:

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளநிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒருசில குடியிருப்பு களுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். கனமழை காரணமாக அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 117.40 அடியாக உள்ளது. வரத்து 308 கனஅடி, திறப்பு 100 கனஅடி, இருப்பு 2159 மி.கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 52.53 அடி, வரத்து 229 கனஅடி, திறப்பு 72 கனஅடி, இருப்பு 2341 மி.கனஅடி.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.90 அடி, வரத்து 30 கனஅடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.23அடி, வரத்து 8 கனஅடி, திறப்பு 3 கனஅடி.

கனமழை காரணமாக சுருளி அருவியில் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவ தால் மறு உத்தரவு வரும்வரை யாரும் குளிக்ககூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியாறு 4.6, தேக்கடி 9.8, கூடலூர் 6.3, சண்முகாநதி அணை 2.4, உத்தமபாளையம் 1.8, போடி 0.6, வைகை அணை 5.2, சோத்துப்பாறை 12, மஞ்சளாறு 5, பெரியகுளம் 21, வீரபாண்டி 8, அரண்மனைப்புதூர் 57, ஆண்டிபட்டி 5.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News