ஆவின் பால் பழைய பாக்கெட்டுகளை விற்பனை செய்ததாக புகார்- ஊழியர்கள் மீது நடவடிக்கை
- ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டில் இன்றைய தேதி 5 என இல்லாமல் 4-ந் தேதி அச்சிடப்பட்டு இருந்தது.
- தவறுக்கு காரணமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து இன்று வினியோகம் செய்த ஆரஞ்சு பால் பாக்கெட்டில் நேற்றைய தேதி இருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு ஆகிய பகுதிகளில் வினியோகம் செய்த ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டில் இன்றைய தேதி 5 என இல்லாமல் 4-ந் தேதி அச்சிடப்பட்டு இருந்தது. இதனால் பழைய பால் பாக்கெட்டை விற்பனை செய்ததாக முகவர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பால் பாக்கெட்டை வாங்கிய சிலர் திருப்பி கொடுத்துவிட்டு சென்றனர். இதுபற்றி காக்களூர் பால் பண்ணை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வு செய்ததில் 4-ந் தேதி என தவறுதலாக அச்சடித்து வினியோகம் செய்துள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டில் இன்றைய தேதியை எந்திரத்தில் மாற்றம் செய்யாமல் நேற்றைய தேதியில் அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அவை பழைய பால் அல்ல. இன்று வழங்கக்கூடிய பால் தான் ஆனால் தேதி தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது. ஒரு எந்திரத்தில் தான் இந்த தவறு நடந்துள்ளது. 400 லிட்டர் பால் தவறுதலாக அச்சிடப் பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த தவறுக்கு காரணமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.