பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி.
திண்டுக்கல் வேணு பிரியாணி கடையில் வாடிக்கையாளர் வாங்கிய பிரியாணியில் கரப்பான்பூச்சி
- வாடிக்கையாளருக்கு பரிமாறப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட போது அதில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
- ஓட்டல் நிர்வாகத்தினர் அலட்சியமாக பதில் அளித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் முத்தழகுபட்டியைச் சேர்ந்தவர் விமல். இவர் நேற்று பிற்பகல் தெற்கு ரத வீதியில் உள்ள வேணு பிரியாணி ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அங்கு பிரியாணி ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தார். பசியோடு இருந்த அவருக்கு பரிமாறப்பட்ட பிரியாணியை சாப்பிட தொடங்கினார். அப்போது அதில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், ஊழியர்கள் மற்றும் ஓட்டல் நிர்வாகத்தினரிடம் தெரிவித்தார்.
ஆனால் ஓட்டல் நிர்வாகத்தினர் அலட்சியமாக பதில் அளித்தனர். இதனால் அவர் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானார். சாப்பிட்டதற்கு பணம் தர வேண்டாம் என்று நிர்வாகம் சார்பில் சமாதானம் செய்ய முயன்றனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஓட்டலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டலில் பரிமாறப்பட்ட பிரியாணியில் கரப்பான்பூச்சி கிடந்தது அங்கு சாப்பிட வந்த வாடிக்கையாளர்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் நிறுத்திச் செல்லும் வாகனங்களால் தெற்குரத வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் வாகன ஓட்டுனர்களுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவுக்கு கடை முன்பு ஏராளமான வாகனங்கள் நிறுத்தியிருந்தாலும் போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இது போன்ற சூழலில் தற்போது வாடிக்கையாளர் சாப்பிட்ட பிரியாணியிலும் கரப்பான் பூச்சி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.